நாயாக வேண்டுமா மனிதன்

 

ஏன் நாய்கள் மனிதனைவிட குறைந்த காலமே வாழ்கின்றன?

ஆறுவயது சிறுவனின் வியப்பூட்டும் பதில் இதோ.....


 

பத்துவயது நிறைவடைந்த ‘ஐரிஸ் வேட்டை நரி’ (Wolf Hound) வகையைச் சார்ந்த ‘பெல்கர்’என்ற பெயருடைய நாய் ஒன்றை பரிசோதிக்க, கால்நடை மருத்துவரான எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பெல்கரின் உரிமையாளர்களான ரான் மற்றும் லிசா தம்பதியினர் மற்றும் அவர்களது மகன் குட்டிப்பையன் ஷேன் ஆகிய அனைவரும் பெல்கரின்பால் பேரன்பு கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் ஒரு அற்புதத்தை நம்பியிருந்தனர்.

பெல்கரை பரிசோதித்த நான், அவன் புற்றுநோயால் இறந்துகொண்டிருப்பதை அறிந்தேன். எந்த வகையிலும் பெல்கரை காப்பாற்ற முடியாத சூழ்நிலையை, அக்குடும்பத்திடம் விளக்கி கூறிய நான், பெல்கரை கருணை கொலை செய்ய பரிந்துரைத்தேன்.

அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொண்டிருந்தபோது, குட்டிப்பையன் ஷேனின் பெற்றோர்கள் என்னிடம், ஷேன் இக்கருணை கொலையை கவனித்தால் நல்லது என்று நினைப்பதாக கூறினார்கள். ஷேன் இதிலிருந்து சில முக்கிய அனுபவங்களை பெறமுடியும் என்று உணர்ந்தார்கள்.

மறுநாள் நான் அவர்களிடம் சென்றபோது, பெல்கரின் குடும்பம் அவனை சுற்றி நின்ற சூழலைப் பார்த்து துக்கத்தில் என் குரல்வளையில் நெறிகட்டியது. ஆனால், ஷேன் மிகவும் சாந்தமாக, கடைசி முறையாக பெல்கரை தடவிக்கொண்டிருப்பதை பார்த்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது அச்சிறுவனுக்கு நன்றாகப் புரிந்துள்ளது. சிலநிமிடங்களில் பெல்கர் அமைதியாக தன் உடலை விட்டுப் பிரிந்தான்.

இந்நிகழ்வை ஷேன் எந்தவித குழப்பமோ, சிரமமோயின்றி கடந்துவிட்டான் என்பது என் உணர்வு.பெல்கரின் பிரிவுக்குப்பின் சில நிமிடங்கள் நாங்கள் ஒன்றாக அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தோம். நாய்களின் வாழ்நாள் மனிதர்களைவிட குறைவாக ஏன் இருக்கவேண்டும் என்று வியந்துகொண்டிருந்தோம். ‘ஏன் என்று எனக்குத் தெரியும்என்று உரத்தக் குரலில் கூறினான், எங்களின் உரையாடல்களை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த ஷேன்.

அதிர்வுற்ற நாங்கள் அவனை நோக்கித் திரும்பினோம். பின்பு அவன் மொழிந்த அனைத்தும் என்னை உறையவைத்தது. நான் இதற்கு முன் இப்படி ஒரு ஆசுவாச விளக்கத்தை கேட்டதில்லை. அவன் கூறியவை என் முயற்சிகளின் பாதையையும், வாழ்வையும் மாற்றியமைத்தது.

மனிதர்கள் பிறக்கிறார்கள். அதனால் நல்வாழ்க்கை வாழ, அதாவது அனைவரையும் எப்பொழுதும் நேசிப்பது மற்றும் நல்லவர்களாக இருப்பது போன்றவற்றை கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், நாய்கள் அதை கற்க வேண்டிய தேவையில்லை. அவைகளின் வாழ்க்கை அதுவாகவே உள்ளதால் நம்மைப்போல் நீண்டகாலம் வாழவேண்டிய தேவை அவைகளுக்கு இல்லை”, என்று அந்த ஆறு வயதுசிறுவன் ஷேன் கூறினான்.



 

  • ·         எளிமையாக வாழுங்கள்
  • ·         வஞ்சகமின்றி அன்பு செய்யுங்கள்
  • ·         ஆழ்ந்து அக்கறை கொள்ளுங்கள்
  • ·         கனிவாக பேசுங்கள்





உங்கள் வாழ்கையில் ஒருநாய் உங்கள்ஆசிரியராக இருந்தால் நீங்கள் கற்றுக்கொள்பவை:

  • ·         உங்கள் அன்பிற்குரியவர் உங்கள் வீட்டிற்கு வந்ததும் எப்போதும் அவரை வரவேற்க ஓடுவீர்கள்.
  • ·         எந்த ஒரு மகிழோட்டதின் வாய்ப்பையும் தவறவிட மாட்டீர்கள்.
  • ·         ஏகாந்தமாக வாழ்வதற்கு புதிய காற்றை, தென்றலை அனுபவிப்பீர்கள்.
  • ·         அடிக்கடி குட்டித்தூக்கம் போடுவீர்கள்.
  • ·         எழுவதற்கு முன் உடலை  நீட்டி வளைப்பீர்கள்.
  • ·         தினமும் ஓடுவீர்கள், விளையாடுவீர்கள்,கும்மாளமடிப்பீர்கள்.
  • ·         பிறரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அவர்கள் உங்களை தொட அனுமதிப்பீர்கள்.
  • ·         மித வெப்பநாட்களில் உங்களின் பின்பகுதி புல்லின் மீது படாமல் படுத்துக்கொள்வீர்கள்.
  • ·         அதிவெப்ப நாட்களில் அதிகதண்ணீர் பருகிவிட்டு மரத்திற்கு அடியில் படுத்துக்கொள்வீர்கள்.
  • ·         நீங்கள் மகிழ்ச்சியுற்ற நேரத்தில், நடனம் ஆடுவீர்கள் மற்றும் உடலை அனைத்து பக்கங்களிலும் ஆட்டிகாட்டுவீர்கள்.
  • ·         ஒரு நெடுநடையின் மகிழ்ச்சிக்கே உற்சாகமாவீர்கள்.
  • ·         உண்மையாக இருப்பீர்கள்.
  • ·         நீங்களாக இல்லாத ஒன்றை நீங்கள்தான் என்று போலியாக நடிக்கமாட்டீர்கள்.
  • ·         புதைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வரவிரும்பினால், அதுவெளி வரும்வரை தோண்டுவீர்கள்.
  • ·         யாராவது சோகமாக இருந்தால், அவர்கள் பக்கத்தில் அமைதியாக அமர்ந்து, பின்பு மெள்ள உங்கள் மூக்கால் அவர்களை கிளறி சாந்தமடைய செய்வீர்கள்.

இவைகளே ஒரு நல்ல நாயிடம் இருந்து நாம்பெறக்கூடிய ‘மகிழ்ச்சிக்கான ரகசியங்கள்

 

 

Share:




 

Share:

அம்மா வந்தார்கள் விரலி மஞ்சளோடு!

 


கரோனா தன் ரத்தக்கறை படிந்த காட்டேறி பற்களை காட்டி... நம்மை சுற்றி சுற்றி வந்து சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த கொடூரச் சிரிப்பை கண்டு குழப்பமடைந்தாலோ, பயந்தாலோ... அந்த உடலில் உயிர் இருக்காது. உயிர் போவதற்கு முன்னால்... சட்டத்துக்குட்பட்டே உங்களது பணமும், முதலும், சொத்தும் முழுமையாக போகும்.

 

ஏதோ ஒரு வகையில் சளியால் பாதிக்கப்பட்டு ‘ங்கொன..  ங்கொன’ வென்று பேசிக்கொண்டும், இருமிக்கொண்டும், மூக்கை சீந்திக்கொண்டும் நம்மை சுற்றி உறவுகளும், நண்பர்களும், மனிதர்களும் திரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

 

இத்தருணத்தில்... அமைதியான சூழலில் மறைந்த என் அம்மாவைப் பற்றிய நினைப்பு வர... ஏனோ எனக்கு அம்மாவின் நினைவோடு விரலி மஞ்சளும் நினைவுக்கு வந்தது.



குழந்தை பருவம் முதல், வளரந்து இரண்டு முதுகலை பட்டங்களை பெற்று.... “எங்களுக்கு எல்லாம் தெரியும்”, என்கிற ‘டுபுக்கு’த்தனமான திமிர்நிலை வருகின்றவரை, சளி மற்றும் தடும காய்ச்சலுக்கு அம்மா எங்களை மருத்துவரிடம் அழைத்து போனதேயில்லை. நல்லெண்ணெயோ, வேப்பெண்ணெயோ, விளக்கெண்ணெயோ ஊற்றப்பட்ட திரியேற்றப்ட்ட ஒரு காமாட்சி விளக்கின் தீபத்தில், விளக்கில் ஊற்றப்பட்டிருக்கும் அந்த ஏதாவதொரு எண்ணையில் நனைக்கப்பட்ட விரலி மஞ்சளை அந்த விளக்கின் தீபத்தில் காட்டி / சிறிது வாட்டி அதில் வரும் புகையை நமது நாசியின் இரு துவாரங்களின் வழியாக... மாற்றி மாற்றி, நிதானமாக உள்ளிழுக்க பறந்துவிடும்... எப்படியாப்பட்ட சளியும், காய்ச்சலும். அந்த வகையில் இது இயற்கையின் பிரம்மாண்ட வரம் பெற்ற ‘இன்ஹேலர்’. இது அன்று....


இன்று, அம்மாவும் விரலி மஞ்சளும் நினைவுக்கு வந்து நாம் பலரிடம் விரலி மஞ்சள் இருக்கின்றதா என்று கேட்க, எவரது வீட்டிலும் இந்த மஞ்சள் இல்லை. பலருக்கு இந்த மஞ்சள் எப்படியிருக்கும் என்றுகூட தெரியவில்லை. எல்லோரது வீடுகளிலும் சமையலுக்கு ‘துரித தயாரிப்பு ‘(Ready made)... அரைத்த, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உடனடி மஞ்சள் பொடிகள்தான். கரோனா ஏன் அப்புறம் நம்மைப் பார்த்து கைதட்டி சிரிக்காது?




மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது. முதல் வகை முட்டா மஞ்சள் என்று அழைக்கப்படுகிற முகத்துக்குப் போடும் மஞ்சள். இரண்டாம் வகை தட்டையாக, நிறைய வாசனையோடு இருக்கும் கஸ்தூரி மஞ்சள். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும் விரலி மஞ்சள். ‌விரலை‌ப் போ‌ன்று ‌நீளமாக இரு‌ப்பதால் இதற்கு ‌’விர‌லி ம‌ ஞ்ச‌ள்’ என பெயர் வந்தது. விரலி மஞ்சள் தா‌ன் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் மாபெரும் சக்தி இருக்கிறது.


கொஞ்ச காலமல்ல, இனி நிரந்தரமாகவே கொரோனாவை நம்மிடமிருந்து தள்ளிவைக்க, நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் இயற்கை, வீட்டு, பாட்டி மற்றும் சித்த வைத்திய முறைகளோடு முதன்மையானதாக இந்த விரலி மஞ்சள் ‘இன்ஹேல’ரையும் பேராயுதமாக இணைத்துகொள்வோம். இல்லையென்றால்.... கரோனா நம்மிடமும் வந்து பல்லிளிக்கும்.


 


தேவையான பொருட்கள்: ஒரு விளக்கு, அதனை திரியிட்ட தீபமேற்ற ஏதாவது ஒரு எண்ணை: நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணை. (இதில் நல்லெண்ணெய் கூடுதலான பயனைத் தரும் என்றும் ஒரு கருத்துள்ளது). முக்கியமாக.... விரலி மஞ்சள். (பார்க்க: இணைப்பில் உள்ள படங்கள்). பார்த்து.... படித்து... பகிர்ந்து... பயன்பெறுவோம். விரலி மஞ்சள் இயற்கையும், நம் முன்னோர்களும்  நமக்கு விட்டுச் சென்றிருக்கும் நற்கொடை கிருமிநாசினி.


- வையகப்பிரியன், உயிரோசை.16 – மே – 2021.அம்மா வந்தார்கள் விரலி மஞ்சளோடு!

Share:

உள்ளது உள்ளபடி! 2

 பொய்யுரையும் புகழுரையும் வேண்டாம்





நீங்கள் ‘திராவிடராக’வே இருந்துகொள்ளுங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே!


பதவியேற்றுக்கொண்ட முதல் நாளில் ஐந்து அதிரடி ஆணைகளோடு உங்களது பணிகளை / பயணத்தை தொடங்கியிருக்கும் முதல்வர் அவர்களே! உங்களது சுட்டுரை கணக்கின் முகப்பில் “Belongs to Dravidian Stock”, என்று உங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் நீங்கள், கையெடுத்து கும்பிடும் உங்களது முகப்பு படத்தோடு “இனித் தமிழகம் வெல்லும்”, என்னும் வாசகத்தையும் இடம்பெறச் செய்ததின்மூலம் உங்களிடமிருக்கும் பல முரண்களையும், வன்மங்களையும் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.



கடந்த 7/05/2021 வெள்ளிக்கிழமை அன்று  தினமணியில், “அன்று அண்ணா... இன்று ஸ்டாலின்”, என்கிற தலைப்பில்  ஒரு கட்டுரை வருகிறது. அதில், ‘பகை மற்றும் பழி உணர்ச்சியில்லாத ஒரு அரசியல்வாதி இருக்கிறாரென்றால் அது நீங்கள்தான்’ என்று மானுட குணத்தின் மகுடத்தை உங்களுக்கு சூட்டியிருக்கிறார் கட்டுரையாளர். நீங்கள் முதல்வர் ஆனபிறகே உங்களிடம் பல நல்ல குணங்கள் இருப்பதாக கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியில் பலர் இருக்கலாம். ஆனால், எது உண்மை, யார் யாருடைய கருத்தெல்லாம் உண்மையானது என்று பகுத்து உணரமுடியாத அளவிற்கு நீங்கள் வெள்ளேந்தியான மனிதராக இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.




உங்களைப் பற்றிய எங்களைப் போன்றவர்களின் புரிதல் இப்படியிருக்க, உங்கள் சுட்டுரை பிரகடனப்படுத்துகிறது நீங்கள் திராவிட இனத்தை சேர்ந்தவரென்று. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கோ, ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கோ, கர்நாடகா முதல்வர் பி எஸ். எடியூரப்பாவிற்கோ, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கோ இல்லாத ‘திராவிட புரிதல்’ தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பவர்களுக்கும் மட்டும் தொடர்ந்து இருந்துகொண்டே இருப்பதற்கான காரணம் புரியாமலில்லை. அண்டை மாநிலத்து முதல்வர்கள் எல்லோரும் எப்பொழுதுமே தெலுங்கராக, கன்னடராக, மலையாளியாக மட்டுமே இருக்கிறார்கள். பாவம் அவர்கள்... திராவிட அறிவும், தெளிவும் அற்றவர்களாக இருக்கிறார்கள்.


நீங்கள் திராவிட இனம் தான். சரி... தமிழ் நாட்டில் உங்களுக்கு வாக்களித்தவர்களில் இலட்சக்கணக்கானவர்கள், தமிழை தாய் மொழியாக பேசி, தாங்கள் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்களே.... வாக்கு சேகரிக்க சென்றபோது அவர்களிடம் எப்பொழுதாவது, “நான் திராவிட இனத்தை சேர்ந்தவன். உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்”, என்று நேர்மையாக ஒரு முறையாவது கூறியிருக்கிறீர்களா?  இந்தத் தேர்தல் வெற்றி, யாரை நோக்கியோ, எதற்காகவோ உங்களை, உங்களது திராவிட இன அடையாள பிரகடனத்தை செய்யவைத்திருந்தாலும்... நாங்கள் தமிழர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பான்மையான  மக்களிடமிருந்து நீங்கள் அந்நியப்பட்டு நிற்பதை நீங்கள் இன்னும் உணரவில்லையா? 


எது எப்படியோ... தி.மு.க., இயக்கத்தின் நிறுவனர், உங்களுக்கெல்லாம் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா.... பலரது ஒப்பற்ற உயிர் தியாகங்களையும் மனதில் கொண்டு... விவரம் இல்லாமல்தான் அன்றைய “மெட்ராஸ் ஸ்டேட்” என்றிருந்த நமது மாநிலத்தின் பெயரை ‘தமிழ் நாடு’ என்று மாற்றிவிட்டார் போல. உங்களது தர்க்கத்தின்படி பார்த்தால், அறிஞர் அண்ணா... நமது மாநிலத்திற்கு ‘திராவிட நாடு’ என்றுதானே பெயர் மாற்றியிருக்க வேண்டும்?



 

“நான் தமிழன். நான் தமிழினத்தை சேர்ந்தவன்”, என்று சொல்வதெல்லாம் அவ்வளவு அருவருப்பான கெட்டவார்த்தையா? திராவிட இனத்தைச் சேர்ந்த யாராவது விளக்கம் சொன்னால்... நாங்களும் புரிந்துகொள்கிறோம்.


தற்பொழுது இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் உங்களது திராவிட பிரகடனமும், நீங்கள் திராவிடராக இருப்பதும்தான் சரியென்றால்... உங்களது நம்பிக்கையில், உரிமையில் தலையிட எங்களைப் போன்றவர்களுக்கு எந்தவித தார்மீக நியாயமும் கிடையாது. ஆனால் தமிழகத்தின் முதல்வராக இருக்கும் உங்களிடம் ஒரு சாமானிய தமிழராக விண்ணப்பிக்க வேண்டிய கோரிக்கைகள் நிறைய இருக்கிறது.

 

தமிழகத்தில் தமிழர்கள் தங்களது  வாழ்வாதாரங்களை – இயற்கை, பொருளாதாரம், அரசியல், வேலைவாய்பு என்று எல்லா வகையிலும், எல்லாத் திசைகளிலும் அடியோடு இழந்துகொண்டிருக்கிற நேரமிது. இந்த இக்கட்டான நேரத்தில்தான்  தமிழக முதல்வராக உங்களது செயல்பாடு தலையாய உயிர்மீட்பு பணியாக இருக்க வேண்டும். தமிழகத்தின் மக்கள் பிரதிநிதியாக இன்றைய சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் உறுப்பினர்களில் எத்தனை பேர் தத்தமது வீட்டில் தமிழல்லாத மொழியை தாய் மொழியாக பேசிக்கொன்டிருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தை நீங்களும் தெரிந்துகொண்டு செய்தியாகவும் வெளியிட்டீர்கள் என்றால், நமது அண்டை மாநிலங்களான... உங்களது மொழியில் திராவிட  மாநிலங்களின் அரசியல் நிலையோடு ஒப்பிட்டு, தமிழகத்தில் இன்றைய தமிழர்களின் அரசியல், அதிகார நிலை என்னவென்பதை முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.

 

காலங்காலமாக ஆட்சிக் கட்டிலில் ஏறுகின்ற கட்சியும், முதல்வரும் தமிழ் மொழிக்கும், மண்ணிற்கும், கலாச்சாரத்திற்கும், இனத்திற்கும் எந்தவித கேடுகளையும் செய்ய மாட்டார்கள் என்று இதுவரை நம்பி... நம்பி ஏமாந்த பெருங்கூட்டம் புதிய முதல்வராக பொறுபேற்று இருக்கும் உங்களிடம் பிரதான, முதன்மை கோரிக்கையாக ஒன்றை மட்டும் அழுத்தமாக வைக்க விரும்புகிறது.

 

‘எந்நிலையிலும் நீங்களும் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்துவிடாதீர்கள். நீங்கள் திராவிடராகவே இருந்துகொள்ளுங்கள். உங்களது திராவிட இன அடையாளத்தை தூக்கிப்பிடிக்க, எம் தமிழினத்திற்கு எவ்வகையிலும் கேடு நினைத்துவிடாதீர்கள்’, என்பதே அது. நான் திராவிடன் என்று சொல்லும் உங்களது அதே சுட்டுரை முகப்புதான் ‘இனித் தமிழகம் வெல்லும்’ என்கிற வாசகத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறது. இந்த வாசகத்திற்கு நீங்கள் உண்மையாக நடந்துகொண்டீர்கள் என்றாலே, தமிழின மீட்சி வரலாற்றில் உங்களுக்கு தனித்த ஒரு இடமிருக்கும்.


நேர்மறையாகவே... அவ்வரலாற்றில் இடம் பெறுவீர்கள் என்று நம்புகிறோம்!


-கலியுகச்சித்தர், 

உயிரோசை.

10/05/2021

Share:

Caste Hierarchy & TN's New Cabinet?

 



தமிழக அமைச்சரவை பட்டியல் சாதிய படிநிலைகளை மறக்காமல், சரியாக எடுத்துச்சொல்கிறதோ?


உள்ளது உள்ளபடி!




பொய்யுரை, புகழுரை வேண்டாம்! 

1

முத்துவேல் கருணாநிதி #ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின்  ‘மாண்புமிகு’ (8வது) முதல்வராக பதவியேற்று உள்ளார். அவருக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். புதிய முதல்வர் ஸ்டாலினுக்கு நாம் கூறும் வாழ்த்து என்பது சம்பிரதாயமானதல்ல.

  

‘தேசிய போர்வாள்’ எச். ராஜாவில் ஆரம்பித்து, தன்னை ‘ஆர்த்தோடாக்ஸ் அம்பி’ என்று பிதற்றிக்கொள்ளும் எஸ்.வி. சேகர் உட்பட அ.தி.மு.க., பெருந்தலைகள் மற்றும் பல நடுநிலை(???) பத்திரிகைகள், ‘ஸ்டாலின் மட்டுமல்ல கருணாநிதி குடும்பத்தில் இனி யாருக்குமே முதல்வராகின்ற வாய்ப்பேயில்லை’, என்று ‘கட்டம்’ காட்டியும்; கட்டம் கட்டியும், கட்டியம் கூறிவந்த நிலையில் பலரது சாபங்கள், வயிற்றெரிச்சலையும் மீறி, மக்களின் ஆதரவோடு நேற்று (7/05/2021) தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கிறார் #ஸ்டாலின். அந்தவகையில் பெரிய எதிர்ப்பும், மிகுந்த எதிர்பார்ப்பும், பெருத்த சதிகளையும் சாபங்களையும் கடந்து... வென்று நிற்கின்ற நிலை ஸ்டாலினுக்கு. அதனாலேயே பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பைப் போல நமக்கும் இருக்கும் எதிர்பார்ப்புகளையும் தாங்கிவருவதுதான் இந்த வாழ்த்து.

 

திரு. ஸ்டாலின்,  மாண்புமிகு முதல்வராக, முதல் நாள் கையெழுத்திட்ட ஆணைகள் ஐந்தும் வரவேற்கத்தக்கதே. அதிலும் குறிப்பாக பால் விலை குறைப்பு மற்றும் கரோனா தொடர்பான உதவிகரமான செய்திகள் அனைத்தும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்கள் மனதில் இனிப்பாய் தங்கி நிற்கும். #வாழ்த்துகள் முதல்வரே!




அமைச்சரவை பட்டியல் சாதிய படிநிலைகளை மறக்காமல், சரியாக எடுத்துச்சொல்கிறதோ?


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே! உங்களோடு பதவியேற்றுக்கொண்ட அமைச்சர் பெருமக்களின் எண்ணிக்கை,  தங்களையும் சேர்த்து, 34. அரசு வெளியிட்டுள்ள அந்த பட்டியலை நாம் பத்திரிகைகள் வாயிலாக பார்த்து தெரிந்துகொண்ட போது, சரியாக 34வது (கடைசி) இடத்தில்தான் ‘ஆதிதிராவிட நலத்துறை’ அமைச்சரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. ஆதிதிராவிட நலத்துறை கடைசி இடத்தில்தான் இருக்கவேண்டும் மற்றும் பட்டியலின அமைச்சர்களான சி.வி. கணேசன் (ஆதி திராவிடர்), மா. மதிவேந்தன் (அருந்ததியர்) மற்றும் ஆதிதிராவிட நல அமைச்சர் என். கயல்விழி (தேவேந்திரர்) உட்பட இம்மூவரும் பதவியேற்பில் கூட இறுதியாகவே அழைக்கப்பட்டது எல்லாமே இயல்பாகவே நடந்துதானா?



 

இயல்பாகவே நடக்கிறதா? அல்லது கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் திராவிட, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெரியாரிய அரசியலின் உண்மையான முகம் இதுதானா? இதே வரிசையில்தான், இத்துறைக்கான முக்கியத்துவமும் கொடுக்கப்படுமா? உங்களது நியாயமான , பாரபட்சமற்ற சிந்தனைக்கு இக்கேள்வியை சமர்ப்பிக்கின்றேன்!


மேலும் பத்து அமைச்சகங்களின் பெயர்களை மாற்றம் செய்திருப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால், நெடுங்காலமாக சர்ச்சைக்குரிய பெயரில் இயங்கிக்கொண்டிருக்கும் “ஆதிதிராவிட நலத்துறை” மட்டும் அப்படியே இயங்குவதில் எவ்வித நியாயமுமில்லை. குறிப்பாக “பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை”, ‘பிற்பட்ட திராவிட நலத்துறை’யாகவோ அல்லது அப்பட்டியலில் உள்ள ஏதோ ஒரே ஒரு சாதியின் பெயரிலோ இல்லாதபோது, பட்டியலினத்தில் இருக்கின்ற எழுபத்தியாறு (76) சாதிகளில் ஒன்றின் பெயரை ஒட்டுமொத்த பட்டியிலனத்திற்கான நலத்துறைக்கு, அமைச்சகத்திற்கு இவ்வளவு காலம் சூட்டியிருப்பதில் என்னவிதமான அரசியல் இருக்கிறது?

 

வேறு எந்த மாநிலத்திலும் “Scheduled Castes” என்பது இவ்வளவு மோசமாக மொழிபெயர்க்கப்படவில்லை. மேலும் பல ஆண்டுகள் தமிழை மைய்யபடுத்திய பல ஆட்சிகளை கண்ட தமிழகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பில் இவ்வளவு சிக்கலா என்று எண்ணுகிற போது சந்தேகமே வலுக்கிறது. உங்களது தந்தையைவிட தமிழ் அறிந்த தமிழர் யார்? அவரின் புதல்வரான உங்களுக்கு தமிழ் எட்டிக்காயாக இருக்கமுடியாது? தற்போது நீங்கள் தலைமைச் செயலாளராக நியமித்திருக்கும் திரு.#வெ. இறையன்பு இ.ஆ.ப., சர்வ அறிவோடு நல்ல தமிழ் புலமையும் பெற்றவர். அவரிடமே கேளுங்கள், “Scheduled Caste” என்பதின் தமிழாக்கம் என்னவென்று?


உங்களது சுட்டுரை முகப்பு பக்கத்தில் ‘இனி தமிழகம் வெல்லும்” என்ற வாசகம் அடங்கிய படத்தையே வைத்துள்ளீர்கள். அது மெய்யாக வேண்டுமென்றால், நல்ல விசயங்களை நல்லெண்ணத்தோடு ஏற்றுக்கொண்டு, அவைகளை அவ்வண்ணமே செயல்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்!


வாழ்த்துகள் மற்றும் நன்றிகளோடு.....

- கலியுகச்சித்தர்,

உயிரோசை.

-

Share:

Total Pageviews

Home Ads

Advertisement

Our Videos

Contact Form

Name

Email *

Message *

seemaan

Facebook

Blog Archive

Recent Posts